பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்திரி பேசியது ஆணவ திமிராகும் : வேல்முருகன்!!

912

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் பேசிய “சேரி பிஹேவியர்” என்ற ஒற்றை வார்த்தை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியதாவது, “தமிழர் குடும்ப வாழ்க்கை முறையை சிதைக்கிற ஒரு நிகழ்ச்சியே இந்த பிக்பாஸ். ஒருவகையில் இது சேடிஸ்ட் யுக்தியாகவே பார்க்கிறேன்.

இந்த நிலையில் ‘சேரி பிஹேவியர்’ என்று காயத்ரி பேசியது, அப்பட்டமான சாதி ஆணவ, ஆதிக்கத் திமிர் ஆகும். அவரின் கீழ்த்தரமான சிந்தனையின் வெளிப்பாடு இது. ‘மனிதர்களுள் உயர்வு தாழ்வு கிடையாது’ என்ற, சமத்துவ சிந்தனை அவரிடமில்லை. அவருக்குள் ஊறிப்போயிருக்கும், ஆதிக்க சாதிய மனோபாவமே இவ்வகையான மோசமான பார்வையை வெளிப்படுத்தியுள்ளது .

அதை, எந்தவிதத் தடையுமில்லாமல் எப்படி அந்தத் தொலைக்காட்சி அனுமதித்தது… என்று தெரியவில்லை. என்னுடைய வருத்தமெல்லாம் எப்படி இதைக் கமல் அனுமதித்தார் என்பதுதான். கமல் முற்போக்கானவர். பெரியாரிய, திராவிடக் கருத்தோடு இயங்கி வந்தவர் என்பதால், அவர் மீது ஜனநாயக சக்திகளுக்குக் கூடுதல் மதிப்பு உண்டு.

ஆனால், அப்படிப்பட்டவரே, இதை அனுமதித்துள்ளார் என்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரின் கள்ள மௌனம் சமூக நீதிக்கு எதிரான செயலாகும். பணம் கிடைத்தால் மட்டும் போதும் என்று கமல் நினைத்துவிட்டாரோ? பணத்துக்காக எதையும் சொல்ல அனுமதிக்கலாமா? இப்படி ஒரு மோசமான வார்த்தையைக் காயத்ரி வெளிப்படுத்தியபோது, அதற்கு கமல் தடை விதித்திருக்க வேண்டும்.

தொலைக்காட்சி நிறுவனம் அதை ஏற்கவில்லை என்றால், சமூக நீதிக்கு எதிரான இந்தச் சாதியப் பேச்சுகளை அனுமதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று கமல், இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி வந்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் கமல், மேலும் நம் மனங்களில் உயர்ந்திருப்பார்.

ஆக, எந்த வகையிலும் இந்த நிகழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படியான சாதி ஆதிக்க மனோபாவக் கருத்துகள் வெளிப்படும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை போடவேண்டும் என்று கூறியுள்ளார்.