கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய பெண்!!

339

இந்தியாவில் கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய பெண்ணை பொலிசார் கையும் களவுமாக கண்டுபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த நிதிஷ் அதிகாரி, ஷில்பி அதிகாரி தம்பதிகளுக்கு திருமணமாகி 12 ஆண்டுகளான நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நிதிஷ்- ஷில்பி டெல்லியில் சிறிய வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் அவர்களுடைய இரண்டு குழந்தைகளும் மேற்குவங்கத்தில் நிதிஷின் பெற்றோரால் வளர்க்கப்பட்டு வருகின்றனர்.

32 வயதான ஷில்பி அதிகாரி டெல்லியில் தனியார் வங்கி ஒன்றில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நிதிஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து அவரின் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த ஷில்பி வேறுவழியில்லாமல் நிதிஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

கடந்த 22ம் திகதி இரவு கணவருக்கு மதுவை கொடுத்து அவரை போதையில் மூழ்கடித்த ஷில்பி தலையணையால் கணவரின் முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளார்.

கொலை செய்துவிட்டு கணவரின் உடலை என்ன செய்வது என தெரியாததால் கணவரின் இறந்த சடலத்துடன் இரண்டு நாட்கள் இருந்துள்ளார். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து, தன் கணவர் திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி அழுது அக்கம்பக்கத்தினரை நம்பவைத்துள்ளார்.

சந்தேகம் அடையாத அக்கம்பக்கத்தினர் நிதிஷ் இயற்கையான முறையில் மரணமடைந்துவிட்டதாகவே நினைத்து அவருடைய உடலை தகனம் செய்ய சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

நிதிஷின் உடலைக் கண்ட ஒருவர் நிதிஷின் கழுத்தில் காயங்கள் இருப்பதையும், அவரின் உடலில் அளவுக்கு அதிகமான துர்நாற்றம் வருவதையும் உணர்ந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் உடலை பிரேதப்பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பின்னர் அதன் பிரேத பரிசோதனையின் அறிக்கையில் தான் அவர் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.

கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய ஷில்பியை பொலிசார் கைது செய்துள்ளனர்.