நடுவீதியில் பற்றி எரிந்த பேரூந்து : சிதறி ஓடிய பயணிகள்!!

972

சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக மாநிலத்துக்கு சொந்தமான அரசு சொகுசுப் பேருந்து ஒன்று நடு வீதியில் தீப்பற்றி எரிந்தது. இதில் அதிஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

கர்நாடக மாநில அரசின் சொகுசுப் பேருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த போது திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே திருமழிசை என்ற இடத்தில் பேருந்தின் பின்புறம் திடீரென தீப்பற்றி எரிந்தது.

பேருந்தின் பின்புறம் பரவிய தீ மளமளவென பற்றி எரிந்தது. உடனடியாகப் பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் இறங்கிவிட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகைதந்த தீயணைப்புப் படை வீரர்கள், பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எப்போதும் பரபரப்பாக, வாகனங்கள் நிறைந்த சாலையில் பேருந்து தொடர்ந்து எரிந்து கொண்டு இருந்ததால் அங்கு போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.