தமிழகத்தின் கோவை அருகே காரில் தீ பற்றிய சம்பவத்தில் மனைவி மற்றும் குழந்தைகள் எதிரில் கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த திலீப்குமார், ராக்கி பண்டிகையை கொண்டாடுவதற்காக கர்நாடகாவிலிருந்து கேரளாவில் உள்ள மனைவி ஆஷாவின் உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் காரில் சென்றுள்ளார்.
அப்போது கோவை மதுக்கரை சுங்கசாவடி அருகே கார் செல்லும் போது காரின் முன்பகுதியில் புகையுடன் தீ எரிய துவங்கி உள்ளது.
இதையடுத்து உடனடியாக காரை நிறுத்திய திலீப்குமார், மனைவி ஆஷா மற்றும் குழந்தைகளை காரில் இருந்து இறங்குமாறு கூறி உள்ளார்,
ஆனால் திலீப் இறங்குவதற்குள் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய துவங்கி உள்ளது, இதனால் ஷீட் பெல்ட்டை அகற்ற முடியாமல் திலீப் உள்ளேயே மாட்டிக்கொண்டார்.
சுங்கசாவடி பணியாளர்கள் வந்து தீயை அணைக்க போராடியும் முடியாததால் கார் முழுமையாக எரிந்தது.
இந்த விபத்தில் காரில் சிக்கிய திலீப்குமார் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தார். பின்னர் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
மனைவி, குழந்தைகள் கண்முன்னே திலீப்குமார் தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.





