வவுனியாவில் நேற்றைய தினம் (22.08.2017) நான்கு வயது பச்சிளம் பாலகனை கொடூரமாக சித்திரவதை செய்த வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் சுந்தரபுரம் படிவம்-1 பகுதியில் வாழ்ந்துவரும் சிறிய தந்தை வேலாயுதம் கஜரூபன் (வயது 24) தலைமறைவாகியுள்ளதால் இவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் சிறுவனை வவுனியா மாவட்ட சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் பொறுப்பேற்றுள்ளனர்.
சிறுவனின் சிகிச்சை முடிந்ததும் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் சிறுவனை முன்னிலைப்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை வவுனியா வைத்தியசாலையில் குறித்த சிறுவன் தனது மழலை குணத்தால் அனைவரது மனங்களிலும் இடம்பிடித்துள்ளதுடன், இவனது குறும்புச் செயல்களை அங்கிருப்பவர்கள் மகிழ்வுடன் கண்டுகளிப்பதை காணக்கூடியதாக உள்ளது.














