வவுனியாவில் கிராம அலுவலருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள் : காரணம் என்ன?

281

 
தமக்கு வறட்சி நிவாரணம் ஏன் வழங்கப்படவில்லை என வவுனியா, பூவரசன்குளம் கிராம அலுவலர் பிரிவு மக்கள் கிராம அலுவலரின் அலுவலகத்திற்கு கேட்கச்சென்றபோது அவர்களை அநாகரிகமாக பேசியதாகத் தெரிவித்து கிராம அலுவலருக்கு எதிராக நேற்று காலை பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பூவரசன்குளம் கிராம அலுவலர் பிரிவில் 600 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் வெறும் நூற்றுக்கும் குறைவான குடும்பங்களுக்கே வறட்சி நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

அதற்காக தெரிவு செய்யப்பட்ட மக்களை நிவாரண வேலைக்காக கிராம அலுவலர் அழைத்திருந்திருந்தார். வறட்சி நிவாரணத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் தம்மை ஏன் புறக்கணித்ததாகவும், தாமும் அப்பகுதியில் தானே வசிக்கின்றோம் எனவும், தமக்கும் வறட்சி தானே என கிராம அலுவலரின் அலுவலகத்திற்கு சென்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதி கிராம அலுவலர் அம்மக்களை பார்த்து தாம் பெயர் விபரங்களை பதிவு செய்யும் போது எங்கு இருந்தீர்கள், வீட்டில் படுத்தா இருந்தீர்கள், எங்கேயாவது படுத்திட்டு இங்கு வந்து கேள்வி கேட்டக்க் கூடாது என வயது வேறுபாடின்றி பலரையும் மிகவும் அவதூறாக தம்மை பேசி அனுப்பியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டமையால் பூவரசன்குளம் பொலிசாரை அழைத்து மக்களை தனது அலுவலகத்தில் இருந்து வெளியேற்ற முற்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் குறித்த கிராம அலுவலர் அலுவலகம் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்,

வறட்சி நிவாரணம் எமக்கும் வேண்டும், வறட்சி நிவாரணம் எவ்வாறு பதியப்பட்டது, அரசே விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே, கிராம அலுவலரை இடம்மாற்றுக்கள், அநாகரிகமாக பேசும் கிராம அலுவலர் வேண்டாம், அதிகாரிகளே அநாகரிகமாக நடக்கலாமா என கோசம் எழுப்பியதுடன் தமக்கும் வறட்சி நிவாரணம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.