வவுனியாவில் பெண்களின் நகைகளை சூறையாடி வந்த இளைஞர் கைது!!

660

வவுனியாவில் பல பிரதேசங்களில் வீதியில் செல்லும் பெண்களின் நகைகளை வழிப்பறி செய்த நபரை நேற்று (23.08) பொலிசார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியாவில் ஆசிகுளம், கோவில்குளம், பட்டைகாடு போன்ற பல்வேறு பகுதிகளில் பகல் நேரத்தில் வீதியில் செல்லும் பெண்களின் தங்கச்சங்கிலி, தாலிக்கொடி போன்றவற்றை குறிவைத்து தங்கநகைகளை சூறையாடிய நபரை பொலிசார் நேற்று (23.08) கைது செய்துள்ளனர்.

குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரான மகாறம்பைகுளம் பகுதியை சேர்ந்த 26 வயதான நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் அண்மையில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட மற்றுமொரு நபரை தேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர். சூட்சுமமான முறையால் குறித்த நகைகளை விற்பனை செய்த இடத்திலும், அடகுவைத்த இடத்திலும் நான்கு லட்சம் பெறுமதியான நகைகளை பொலிசார் மீட்டுள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமாரவின் வழிகாட்டலின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியஸ்ரீ பெர்னாண்டோ, மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பூரளகெதர, பொலிஸ் சார்ஜன் ஜேசுதாசன் தலைமையிலான குழுவினர் இன் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.