வவுனியா கந்தபுரம் பிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தவசிக்குளம் கிராம மக்கள் தங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக தெரிவித்து கிராம அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை 10.30 மணிக்கு போராட்டம் நடத்தினர்.
வவுனியா பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட தவசிக்குளம் கிராமத்தில் 756 குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் வெறும் 40 குடும்பங்களுக்கு மாத்திரமே வறட்சி நிவாரணம் வழங்கப்படுவதாகவும், அத்தெரிவில் கூட மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் கிராமத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்து மக்கள் கிராம அலுவலர் அலுவலகத்திற்கு முன்னால் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ‘கிராம அலுவலரை மாற்று, கிராம அபிவிருத்திச் சங்க தலைவரை மாற்று என கோசமெழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்..
வறட்சி நிவாரணத் தெரிவானது மக்களுக்கு அறிவித்து சுயாதீனமாக நடைபெறவில்லை. தனிப்பட்ட ரீதியில் தெரிவுகள் இடம்பெற்றுள்ளதாகவும், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் விருப்படியே தெரிவு இடம்பெற்றுள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டினர்.
வறட்சி நிவாறணத்திற்கு தெரிவு செய்யப்பட்ட விவசாயிகள் எனக் கூறப்படும் 40 பேரில் கூலி வேலை செய்பவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மக்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.கிருஸ்ணமூர்த்தி,
வவுனியா பிரதேச செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வறட்சி நிவாரணமானது பயிர்கள் செய்து அழிவடைந்தவர்களின் விபரங்கள் கமக்கார அமைப்பினூடாக தெரிவு செய்து கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலகத்திற்கு வழங்கியிருந்தோம். தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.









