வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள பண்டாரவன்னியனின் உருவச்சிலை முன்றலில் இன்று (25.08.2017) காலை 8.30 மணியளவில் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மாலை சூடி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோஹன புஸ்பகுமார, வடமாகாண சபை உறுப்பினர்களாக ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா வர்த்தகர் சங்க செயலாளர் ஜி.ஸ்ரீஸ்கந்தாராஜா, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாசன், பொது அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் 10.30 மணியளவில் வவுனியா கலாச்சாரமண்டபத்தில் பண்டாரவன்னியன் நினைவுப்பேருரை, பண்டாரவன்னியன் நாடக இறுவட்டு வெளியீடு, பாடசாலை மாணவர்களின் நடனம், மாணவர் கல்வி நலநிதி உதவிகள் வழங்கல் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
1982ம் ஆண்டு வவுனியா மாவட்ட சபைத்தலைவராகவிருந்த மு.சிற்றம்பலம் அவர்களின் அழைப்பின் பேரில் பண்டாரவன்னியனுடைய இவ்வுருவச்சிலையினை 1982ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த தா.சிவசிதம்பரம் அவர்களினால் 1982ம் ஆண்டு ஆடி மாதம் 16ம்திகதி திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




































