கணவரின் இறுதி சடங்கில் மயங்கி விழுந்து மனைவியும் மரணம்!!

518

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள சோலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிக்காரி (வயது 76). இவர் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

இவருடைய மனைவி பொன்னியம்மாள் (66). இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி ராஜசேகர் ஆகிய 2 மகன்களும் வசந்தா என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

சிக்காரி சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்தார். இதனால் அவர் கோவையில் உள்ள தனது மகள் வசந்தா வீட்டில் தங்கியிருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிக்காரிக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மகள் வீட்டிலேயே இறந்துவிட்டார். கணவர் அருகில் இருந்து கவனித்துவந்த பொன்னியம்மாள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

பின்னர் சோலூர் கிராமத்துக்கு அவரது சடலம் கொண்டுவரப்பட்டது. சிக்காரியின் உடலுக்கு இறுதி சடங்கு நிகழ்ச்சி நடந்துகொண்டு இருந்தது.

அப்போது சிக்காரியின் உடலை பார்த்து கதறி அழுது கொண்டிருந்த பொன்னியம்மாள் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பதறிப்போன உறவினர்கள் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தும் மயக்கம் தெளியவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஊட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு பொன்னியம்மாளை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கணவன்–மனைவி இருவரும் ஒரே நேரத்தில் இறந்ததால் குடும்பத்தினரும் உறவினர்களும் சோகத்தில் மூழ்கினர். பின்னர் இருவரது உடல்களும் அருகருகே அடக்கம் செய்யப்பட்டன.

இருவரும் ஒன்றாக வாழ்ந்து சாவிலும் இணை பிரியாமல் இறந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.