வவுனியா நித்தியநகர் பிரதான வீதி நீண்ட நாட்களாக செப்பனிடப்படவில்லை : மக்கள் விசனம்!!

1154

 
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூவரசங்குளத்திலிருந்து மணியர்குளம், நித்தியநகர் மற்றும் கந்தசாமி நகரூடாக செட்டிக்குளம் செல்லும் பிரதான வீதியே நீண்ட நாட்களாக திருத்தப்படாமையால் குறிப்பிட்ட கிராமத்து மக்கள் போக்குவரத்து செய்வதில் இடர்பாடுகளை சந்தித்து வருகிறார்கள்.

யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் 1998 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நிலையில் வீதி சீரின்மையால் தமது விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதிலும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

இதேவேளை பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பல கிலோமீற்றர் தூரம் நடந்து செல்லவேண்டியிருப்பதால் மழைக்காலங்களில் பெரும் இன்னல்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கும் கிராம மக்கள் கிராமத்தில் வைத்தியசாலை வசதி இன்மையால் நோயாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதிலும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

பிரதேசசபை மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டும் பாதைகள் சீர் செய்து தரப்படவில்லை பாதைகள் சீரின்மையால் அதை காரணம் காட்டி பேரூந்துகள் எமது கிராமத்திற்கு வருவதில்லை என்பதுடன் அரசியல்வாதிகள் பாதையை திருத்தி தருவதாக வாக்குறுதிகள் மாத்திரம் வழங்கி வருவதாகவும் நித்திய நகர் கிராமத்தின் அபிவிருத்தி சங்கத் தலைவர் எஸ்.பரமசிவம் குற்றஞ்சாட்டினார்.

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இந்த வீதியை விரைவில் புனரமைத்து தருமாறு நித்தியநகர் கிராமத்து மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.