தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் பெண்ணுக்கு கைத்தொலைபேசியில் குறுந்தகவல் அனுப்பிய இளைஞர் அடித்துகொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவைகுண்டத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மனைவி மகேஸ்வரிக்கு அவரது உறவினரான சக்திவேல் என்ற இளைஞன் கைத்தொலைபேசியில் தகாத முறையில் குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை சக்திவேல் மகேஸ்வரியைப் பார்க்க திருவைகுண்டத்துக்கு நேரில் வந்துள்ளார். அப்போது, செல்பேசியில் குறுந்தகவல் அனுப்பியது தொடர்பாக மாடசாமி விளக்கம் கேட்டுள்ளார்.
இதில் வாக்குவாதம் முற்றவே மாடசாமியும் அவரது உறவினர் ரமேஷ் என்பவரும் இணைந்து இரும்புக் கம்பியால் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே சக்திவேல் உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்த காவல்துறையினர் மாடசாமியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய மாடசாமியின் உறவினர் ரமேஷை தேடிவருகின்றனர்.






