தமிழகத்தில் இறந்த முதியவரின் உடலை அடக்கம் செய்யும் வரை, காகம் ஒன்று கூடவே இருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த முதியவர் மாரிமுத்து. இவர் சமீபத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் இவரின் உடலை அடக்கம் செய்த போது, காகம் ஒன்று அடக்கம் செய்யும் வரை உடன் இருந்துள்ளது.
இறந்த நம் உறவினர்கள் காகமாக மாறுவார்கள் என்று இந்து மத நம்பிக்கை கூறப்படுகிறது. இதன் படி பித்ருக்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும், அவர்களின் ஆன்மா சாந்தியடைய வழிபாடுகள் நடத்தி காகத்திற்கு சாதம் வைப்பது வழக்கம்.
இப்படி இருக்க, உடல் நலக் குறைவால் இறந்த மாரிமுத்துவின் சடலத்திற்கு அருகே, அங்கு படையல் செய்து வைக்கப்பட்டிருந்த அரிசி மீது காகம் ஒன்று சுமார் 3 மணி நேரம் அங்கேயே அமைதியாக அமர்ந்திருந்தது.
தொடர்ந்து அதை விரட்டியும் அது பறக்காததால், அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர். மேலும் மாரிமுத்துவின் மனைவி பொன்னுபாப்பு கடந்த ஆண்டு இதே நாளில் உயிரிழந்தார், அவர் தான் காகமாக வந்துள்ளார் என உறவினர்கள், பொதுமக்கள் தெரிவித்தனர்.






