வவுனியா பூவரசன்குளம் பகுதியில் இன்று (02.10) காலை 8 மணியிலிருந்து பிரதான வீதியை மறித்து அப்பகுதி மக்கள், பொது அமைப்புக்கள் ஆகிய இணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.
பூவரசன்குளம் பகுதியிலிருந்து வேலன்குளம், சின்னடம்பன், கந்தன்குளம், செட்டிகுளம், கோயில்புளியங்குளம், சின்னத்தம்பனை போன்ற பிரதான மன்னார் வீதிகளைப் புனரமைத்துத்தருமாறு கோரியே இன்றைய தினம் பொதுமக்கள் தமது போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். இதன் காரமணாக அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டும் குறித்த மக்கள் இவ்வீதியை புனரமைத்துத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டபோது அவ்விடத்திற்குச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் குறித்த வீதியைப்புனரமைத்துத்தருவதாக வாக்குறுதிகள் அளித்திருந்தனர்.
தமது அடிப்படைத் தேவைகளான கிணறு, வீட்டத்திட்டம் வீதி போன்வற்றை போராட்டங்கள் மேற்கொண்டே பெற்றுக்கொள்ளவேண்டிய கட்டத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாவுகம் இதனால் மக்கள் பிரதிநிதிகள் தமக்கான வேலைகளை செய்யத்தவறியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
இன்றைய ஆர்ப்பாட்டத்தில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், சமூகமளித்து தமது தரப்பு நியாயங்களை மக்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
எனினும் பிரதான வீதியை மறித்து மக்கள் பொது அமைப்புக்கள் என்பன இணைந்து தொடர்ந்து ஒன்றரை மணி நேரத்திற்குப்பின்னர் பூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசிங்க தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் பொதுமக்களுடன் கலந்துரையாடி வீதியின் ஊடான போக்குவரத்தினை தடையின்றி மேற்கொண்டு வந்ததுடன் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து குறித்த வீதியை புனரைமப்பது தொடர்பாக கலந்துயைராடி வருகின்றனர்.














