வவுனியாவில் குடிநீர் கேட்டு வீதியிலிருந்து போராட்டம் : மூடப்பட்ட A9 வீதி!!

611

 
வவுனியாவில் பன்றிக்கெய்தகுளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு முன்பாகவுள்ள இன்று (03.10.2017) மதியம் 3 மணியளவில் ஏ9 பிரதான வீதியை மறித்து குடிநீர் கேட்டு மரையடித்தகுளம் இந்தியன் வீட்டுத்திட்டத்திலுள்ள பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் ஏ9 பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டது.

குறித்த மரையடித்தகுளம் பகுதியிலுள்ள இந்தியன் வீட்டுத்திட்டத்தில் 45ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போதுள்ள வறட்சியான காலநிலையினையடுத்து அப்பகுதியில் அமைக்கப்பட்ட ஏழு குளாய்க் கிணறுகளில் தற்போது ஒரு குளாய்கிணறிலிருந்தே குடிநீரினைப் பெற்று வருகின்றனர்.

எனவே இது தொடர்பாக பல தடவைகள் வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்தும் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்து அப்பகுதிமக்கள் தமது அடிப்படை தேவையினை நிவர்த்தி செய்யக்கோரி தமது பாடசாலை செல்லும் பிள்ளைகளுடன் வீதியிலிருந்து குடிநீர் கேட்டு வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் தமது குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்வதாகவும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தனர்

மரையடித்தகுளம் பகுதி மக்களின் போராட்டம் காரணமாக பிரதான வீதியான ஏ9 வீதியின் போக்குவரத்து சுமார் 45நிமிடங்களுக்கு மேல் தடைப்பட்டு நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் வீதியின் இருபுறமும் தரித்து நின்றன.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஒமந்தை உதவி பொலிஸ் பொருப்பதிகாரி மகிந்த ஜெயசென தலைமையிலான பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி மூன்று நாட்களுக்குள் உரிய தீர்வினை பெற்றுத் தருவதாக உறுதிமொழி வழங்கியதையடுத்து போராட்டகாரர்கள் போராட்ட இடத்திலிருந்து விலகிச்சென்றனர்.

ஒமந்தை போக்குவரத்து பொலிஸார் போக்குவரத்தினை சீர்செய்தனர். தற்போது ஏ9 வீதியின் போக்குவரத்து சீராக காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.