குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட காரணங்கள்!!

1486

family

உறவுகளை கையாளுவதை பொறுத்தே இன்பமும் துன்பமும் உள்ளது. அப்படிப்பட்ட மென்மையான உறவுகள் பலவித பிரச்சனைகளால் உடைந்து போக வாய்ப்பு உள்ளது.

காதல், தாம்பத்யம் மற்றும் பணம் – இந்த மூன்றும் தான் உறவுகளில் சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கும் முக்கிய பிரச்சனைகளாகும். இதனை எப்படி சமாளிப்பது என்பதை பார்க்கலாம்.

* உங்கள் பிரச்சனைகளை பற்றி கணவன்- மனைவியிடம் பேச வெட்கப்படாதீர்கள். நீங்கள் இந்த விஷயத்தில் சந்தோஷமாக இல்லை என்பது நீங்கள் சொல்லாமல் இருந்தால், அவர்களுக்கு எப்படி புரியும், ஆகவே எந்த பிரச்சனையாக இருந்தாலும் உங்கள் கணவர்- மனையிடம் வெளிப்படையாக பேசுங்கள்.

* தாம்பத்தியத்தில் ஏற்படும் பிரச்சனையைப் போக்குவதற்கு ஒரு மருத்துவரை அணுகலாம். இதனால் ஒருவேளை அந்த விடயத்தில் உங்களுக்கு ஏதாவது மறைமுக பிரச்சனை இருந்தால், உங்கள் மருத்துவர் உங்கள் பிரச்சனையை தீர்க்க உதவலாம்.

* பணம் தான் எல்லா பிரச்சனைக்கும் முதன்மையான காரணமாக விளங்குகிறது. கல்யாணத்திற்கு முன்போ அல்லது பின்போ, பணத்தினால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இப்போதெல்லாம் தம்பதிகள் தனித் தனியாகவே வங்கிக் கணக்குகள் வைக்க விரும்புகிறார்கள் என்று ஒரு சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இத்தகைய பிரச்சனைகளும் இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட வழிவகை செய்கிறது.

* முதலில் கணவன்- மனைவியிடம் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதை தெளிவாக பேசி விடுங்கள். ஏதாவது ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, செலவளிப்பதற்கு ஒருவர், சேமிப்பதற்கு ஒருவர் என முடிவெடுக்கலாம் அல்லது சம அளவில் இருவரும் சேமிப்புக்கு கை கோர்க்கலாம். ஆனால் இருவரில் யாராவது ஒருவருக்கு பணப் பிரச்சினை ஏற்படும் போது இந்த அமைப்பை சற்று நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

* முக்கியமாக இருவருக்கும் ஏதாவது கடன் பிரச்சனை இருந்தால் அதை ஒருவருக்கொருவர் மறைக்காமல் தெரிவிக்க வேண்டும். மேலும் குறுகிய கால மற்றும் நீண்ட கால லட்சியங்களை திட்டமிட வேண்டும்.

* பல தம்பதியர்கள், தங்கள் கணவன் அல்லது மனைவி தங்களிடம் அன்பாக இல்லை என்றும், தங்கள் பேச்சை கேட்பதில்லை என்றும் நினைக்கிறார்கள். அதற்கு காரணம் உட்கார்ந்து பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என்று இருவருமே நினைப்பதில்லை.

* வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, நடு நடுவே உங்கள் துணையிடம் பேசும் பழக்கத்தை தவிர்க்கவும். அதே போல் உங்கள் துணையிடம் பேசி கொண்டிருக்கும் போது, படிப்பதிலோ, தொலைபேசியில் உரையாடுவதையோ தவிர்க்கவும். ஆகவே இருவரும் பேசும் போது தொந்தரவு ஏற்படாமல் இருப்பதற்கு ஒரு நேரத்தை இருவரும் முடிவு செய்து கொள்ளுங்கள்.

* கோபத்தினால் பிரச்சினைகளை பேச முடியாவிட்டால் அதற்கு என்ன வழி என்பதை யோசியுங்கள். ஒருவரை பார்த்து மற்றொருவர் கத்த கூடாது என்று முடிவெடுங்கள். புண்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்றும் முடிவெடுங்கள்.

இவற்றை பின்பற்றிப் பாருங்கள் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறையும்.