அவுஸ்திரேலியாவின் மானுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 32 வயதான ரஜீவ் ராஜேந்திரன் என்ற இளைஞன் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் அவரின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு 9000 அமெரிக்க டொலர் உறவினர்களிடம் கோரப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் இதற்க்கு கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகம் மறுப்பு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது ரஜீவ் ராஜேந்திரனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் உயிருடன் தனது மகனை பார்க்க முடியாவிட்டாலும் உயிரிழந்த தனது மகனுடைய உடலையேனும் பார்க்க வேண்டும் என ரஜீவ் ராஜேந்திரனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உயிரிழப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே தன்னுடன் தொலைபேசி வாயிலாக கதைத்தார். விரைவில் உங்களை பார்க்க வந்து விடுவேன் என்று தெரிவித்தார்.
இன்று அவர் உயிரிழந்து விட்டார் என்ற செய்தியே எங்கள் காதுகளுக்கு வந்து கிடைத்துள்ளது. உயிருடன் எனது மகனை பார்க்க முடியாவிட்டாலும், உயிரிழந்த தனது மகனுடைய உடலையேனும் பார்க்க வேண்டும் என ரஜீவ் ராஜேந்திரனின் தாயார் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.






