தமிழக தலைநகர் சென்னை அருகே நடந்த பெண் கொலையில், நகைக்காக கணவரே குடிபோதையில் மனைவியை கொன்ற கொடூர செயலை பொலிசார் கண்டறிந்து கைது செய்துள்ளனர்.
சென்னை ஆவடியை அடுத்த வெள்ளானூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொள்ளுமேடு கிராமத்தை சேர்ந்த நிஷாராஜன் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி மோகனப்பிரியா, கடந்த 6ம் திகதி பட்டப்பகலில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். மட்டுமின்றி அவர் அணிந்திருந்த 6 பவுண் நகைகள் மட்டும் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஆவடி காவல் உதவி ஆணையர், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் மோகனப்பிரியாவின் கணவர் நிஷாராஜன் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், குடி பழக்கத்திற்கு அடிமையான நிஷா ராஜனை, குடியை நிறுத்த சொல்லி மோகனப்பிரியா தொடர்ந்து வலியுறுத்தியுள்ளது தெரிய வந்தது.
குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை என்றால் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொள்வதாகவும் மோகனப்பிரியா சம்பவத்தின் போது மிரட்டியுள்ளார்.
இதனிடையே மது போதையிலிருந்த கணவர் நிஷாராஜன், ஆத்திரத்தில் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்ததையும் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனிடையே காவல்துறை விசாரணையை திசை திருப்பும் வகையில், மனைவி அணிந்திருந்த நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடியதாகவும் நிஷாராஜன் ஒப்புகொண்டுள்ளார்.
இதனையடுத்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.






