10 வருடங்களாக தனது கணவர் மற்றும் மகனை தேடி அலைந்த பெண் மரணம்!!

243

காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவரையும், மகனையும் கடந்த 10 வருடங்களாக தேடி அலைந்து, ஏக்கத்துடன் காணப்பட்ட மன்னார் முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த தாய் ஒருவர் நேற்று உரியிழந்துள்ளார்.

கொழும்பில் 2008 ஆம் ஆண்டு வெள்ளைவானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கச் செய்யப்பட்ட மன்னார் முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த ரொசான்லி லியோனின் தாயாரும் அமலன் லியோனின் மனைவியுமான ஜெசிந்தா பீரீஸ் (வயது-55) என்பவரே மாரடைப்பால் உயிரிழந்தார்.

கடந்த 10 வருடங்களுக்கு முன் கொழும்பில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவர்அமலன் லியோன் மற்றும் மகன் ஆகியோரை குறித்த தாய் தேடி வந்தார்.

இந்த நிலையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கொழும்பில் கடற்படையின் இரகசிய முகாமில் கண்டெடுக்கப்பட்ட 12 அடையாள அட்டைகள் தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.

அந்த வழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட மன்னார் முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த சேர்ந்த அமலன் லியோன் மற்றும் அவரது மகனான ரொசான்லி லியோன் ஆகியோரது அடையாள அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைகளுக்காக குறித்த தாய் நீண்ட காலமாக கொழும்பு சென்று வந்துள்ளார். பல வருடங்களாக இடம் பெற்று வந்த குறித்த விசாரணைகளுக்கு சென்று வந்த குறித்த தாய் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று அதிகாலை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

தனது கணவர் மற்றும் மகன் காணாமல் போனமை தொடர்பில் குறித்த தாய் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு, காணாமல் போன தமது உறவுகளை மீட்டு தருமாறு அரசிற்கு அழுத்தத்தை கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.