வவுனியாவில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை புறக்கணித்த ஜனாதிபதி மைத்திரி!!

665

 
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நேற்று (21.10.2017) காலை 9.30 மணியளவில் நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் , வடமாகாண சபை உறுப்பினர்கள் , அரச உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் போது இந்த வருடம் இடம்பெற்ற புலமைப்பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பரிசில்கள் வழங்கப்படவிருந்த நிலையில், கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறாமல் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினை பெற்ற மாணவர்களுக்கு மாத்திரம் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இதனையடுத்து மற்றைய மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த மனவேதனையுடன் சென்றதை காணக்கூடியதாகவிருந்தது. இவ் விடயம் தொடர்பாக பெற்றோர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

இவ்வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதியின் கைகளினால் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது எனவே அனைவரும் உங்கள் பிள்ளைகளை வவுனியா சைவப்பிரகாச கல்லூரிக்கு அழைத்து வருமாறு பிரதேச செயலகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனை நம்பி நாங்கள் எங்கள் பிள்ளைகளுடன் வந்தோம். ஆனால் பரிசில்கள் எவையும் வழங்கப்படாமையினால் மிகுந்த வேதனையளிக்கின்றது.

எனது மகன் இன்று காலை ஜனாதிபதியின் கையால் பரிசில் வாங்கவுள்ளேன் என்ற சந்தோசத்தில் வந்தான். ஆனால் தற்போது அழுது கொண்டு செல்கின்றான் என தெரிவித்தார்.

இது சம்பந்தமாக ஏற்பாட்டுக்குழுவுடன் தொடர்பு கொண்டு வினாவிய போது, ஜனாதிபதிக்கு நேரமின்மை காரணமாகவே இக் கௌரவிப்பு நிகழ்வு நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.