படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்தினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துள்ளார்.
நடமாடும் சேவையில் கலந்து கொள்வதற்காக வவுனியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தால் வவுனியாவில் வழங்கப்பட்ட வீட்டில் தற்போது வசித்து வரும் வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார்.
அண்மையில் வித்தியா கொலை தொடர்பான விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றில் ட்யல் அட்பார் முறையில் விசாரணைகள் நடைபெற்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதன்போது, ஜனாதிபதியால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக விரைவாக வழக்கு விசாரணைகளை முடிவுறுத்தி தீர்ப்பு வழங்கியமைக்காக ஜனாதிபதிக்கு வித்தியாவின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க, நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் ஆகியோரும் ஜனாதிபதியுடன் வித்தியாவின் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
நேற்று வவுனியாவில் இடம்பெற்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி நடமாடும் சேவை நிகழ்வின் போது ஜனாதிபதியின் காலில் வீழ்ந்து கதறி அழுது நன்றியை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.










