இலங்கையின் வான்பரப்பில் இன்று வழமைக்கு மாறான நிகழ்வுகள் இடம்பெறக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்கல் மழையை பார்வையிடும் வாய்ப்பு இலங்கை மக்களுக்கும் கிடைத்துள்ளது. இலங்கையின் பல பகுதிகளில் இன்றிரவு முதல் நாளை அதிகாலை வரையான காலப்பகுதியில் விண்கல் மழை பெய்யும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான அரிய விடயம் இலங்கையில் இடம்பெறவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இரவிலும் பொழியக்கூடிய இந்த விண்கல் மழை மிக அரிதானதொன்று எனவும், இந்த நிகழ்வை மக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே, ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 20 முதல் 23ஆம் திகதி வரை ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் சுமார் இருபது விண்கல் வரை பூமியில் பொழிகின்றன. எனினும், அவை பூமியை அடைவதற்குள் எரிந்து சாம்பராகிவிடுவதால் பெரும்பாலான சமயங்களில் அவற்றைக் கண்களால் காண முடிவதில்லை.
இரவுப் பொழுதுகளும், விடியலுக்கு முன்னான பொழுதுகளும் அவற்றைக் காண்பதற்கு உகந்த நேரமாகும். இம்முறை பொழியவிருக்கும் விண்கல் மழையை இலங்கையின் வட மற்றும் தென் பகுதி மக்கள் காணக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.






