நாவற்குழி தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான ரயில் போக்குவரத்து மட்டுப் படுத்தப்பட்டுள்ளது!!

492

வடக்கு ரயில் மார்க்கத்தில் நாவற்குழி தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், நாவற்குழி பாலத்தை புனரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கபடுவதால் குறித்த பகுதியில் மாத்திரம் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து நாவற்குழி வரையான ரயில் சேவைகள் வழமைபோல முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாவற்குழி ரயில் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் ரயில் நிலையம் வரையில் இலங்கை போக்குவரத்து சபையினூடாக விசேட பஸ் சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் கூறியுள்ளார்.

நாவற்குழி பாலத்தின் புனரமைப்புப் பணிகள் இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.