இலங்கை மற்றும் கோவைக்கு இடையிலான விமான சேவை அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு ஆண்டில் மட்டும் 12 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இலங்கையிலிருந்து சென்ற பயணிகளிடம் இருந்து மட்டும் 10 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கோவை மண்டல சுங்கம் மற்றும் கலால் வரித்துறை ஆணையர் ஜி.சீனிவாசராவ் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் கடந்த 20ஆம் திகதி கொழும்பிலிருந்து வந்த இலங்கையைச் சேர்ந்த சத்தியசீலன் என்பவரை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதில், அவரது உடலில் உலோகப் பொருட்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதித்து சோதனை செய்ததில் வயிற்றில் பொருட்கள் இருப்பது உறுதியானது.
மருத்துவ சிகிச்சையின் அடிப்படையில் வயிற்றில் இருந்த 20 தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பில் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “குறைந்த அளவிலான தங்கக் கட்டிகள் 13 சதவீத வரி செலுத்தி கொண்டு வரப்படுகிறது அல்லது ஆபரணத் தங்கமாக கொண்டு வரப்படுகிறது.
விலை உயர்ந்த ஆபரணக் கற்கள், கொகைன் போன்ற போதைப் பொருட்கள் மட்டுமே, வயிற்றுக்குள் வைத்து கடத்தி வருகிறார்கள்.
குறைந்த மதிப்புள்ள தங்கத்தை வயிற்றில் வைத்து கடத்தி வந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றாலும், இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
நடப்பு நிதி ஆண்டில் கோவை விமானநிலையத்துக்கு பல்வேறு வகைகளில் கடத்தி வரப்பட்ட தங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதன் படி, கோவை விமானநிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை நகைகளாக, கட்டிகளாக 12.145 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.3.69 கோடி (இந்திய ரூபா). அதில் சுமார் 10 கிலோ தங்கம் இலங்கையிலிருந்து வரும் பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்டவை.
கடந்த ஜூலை மாதம் முதல் கோவையிலிருந்து இலங்கைக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. குறைந்த கட்டணம் என்பதால் பயணிகள் அதிகம் பேர் இந்த சேவையைப் பயன்படுத்துகிறார்கள்.
அதில் இதுபோன்ற கடத்தல் சம்பவங்களும் அதிகமாக இருப்பதால் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடத்தி வரப்படும் பொருட்களின் மதிப்பு 20 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும்போது மட்டுமே கைது நடவடிக்கை எடுக்க முடியும்.
அதற்கும் குறைவாக இருக்கும்போது வரி, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மட்டுமே எடுக்க முடியும். பொருட்களை உடலில் மறைத்து கடத்தி வரும் பயணிகள் அரசு மருத்துவமனைக்கே கொண்டு சென்று சிகிச்சை வழங்க முடியும். ஆனால், அவசரத் தேவைக்காக அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சினிமா படத்தில் வரும் காட்சிகளை மிஞ்சும் வகையில் தற்போது உடலில் மறைத்து வைத்து தங்க பிஸ்கட் மற்றும் தங்க ஆபரணங்கள் கடத்தி வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.






