இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் கடத்தல் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய இந்திய நடிகை புவனேஸ்வரியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவரை இம்மாதம் 30ஆம் திகதி நேரில் முன்னிலையாகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த மாதம் 23ஆம் திகதி காணாமல் போயிருந்தார்.
பேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால் மிதுன் என்பவருடன் குறித்த இளம் பெண் காணாமல் போனதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் காணாமல் போன இலங்கை பெண்ணின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “காணாமால் போன மகளை நடிகை புவனேஸ்வரி வீட்டில் அடைத்து வைத்திருக்கிறார், மகளுக்கு போதைப் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டார், அவரை மீட்டுத் தர வேண்டும்” என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர். அத்துடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாத நடிகை புவனேஸ்வரிக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் நடிகை புவனேஸ்வரி வரும் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் கண்டிப்பாக முன்னிலையாக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






