தூக்கில் தொங்கிய புதுப்பெண் : காதல் கணவரே கொன்று விட்டதாக புகார்!!

1084

காதல் திருமணம் செய்த புதுப்பெண் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள பல்லாவரத்தை சேர்ந்தவர் நயின்பாஷா, இவரின் மகள் ஷாகிரா (20). அவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் கார்த்திக் (27) என்பவருடன் ஷாகிராவுக்கு காதல் இருந்து வந்தது.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 40 நாட்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அங்குள்ள வாடகை வீட்டில் புதுமண தம்பதிகள் வாழ்ந்து வந்தார்கள்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பிறகு ஷாகிரா வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியதாக கூறப்படுகிறது.

உடனடியாக ஷாகிராவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போது வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவலறிந்த ஷாகிராவின் பெற்றோர், தங்கள் மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவளை கார்த்திக் தான் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாகவும் புகார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.