முக அழகைக் கெடுக்கும் முகப்பருவை தவிர்க்க 10 வழிகள்!!

526

Pimbleமுகப்பருக்களானது முகத்தின் அழகைக் கெடுக்கும் வண்ணம் வரக்கூடியது. முகப்பருக்கள் வருவதற்கான காரணம் தூசிகள், பக்டீரியா மற்றும் இறந்த செல்களின் கலவையானது சரும எண்ணெய் சுரப்பிகளில் தங்கி புரப்பியோனி பக்டீரியாவை (Propionibacteria) வளர்ச்சி அடையச் செய்து பருக்களாக வெளிப்படுகின்றன.

அதுமட்டுமின்றி வேறு சில சரும பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடுகின்றன. மேலும் பி.சி.ஓ.எஸ், கர்ப்பம் மற்றும் எண்ணெய்ப் பசை சருமம் கூட முகப்பருக்களை உண்டாக்கும்.
இத்தகைய பருக்கள் முகத்தில் வந்தால் அவை முகத்தின் அழகையே பாழாக்கிவிடும்.

அதேப் போன்று இவற்றைப் போக்குவதும் மிகவும் கடினம். இருப்பினும், ஒருசில இயற்கைப் பொருட்கள் மற்றும் செயல்கள் மூலம் முகங்களில் வரும் பருக்களை போக்க முடியும். அதிலும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால் முடியாதது எதுவும் இல்லை. சரி இப்போது முகத்தில் ஏற்படும் பருக்களை போக்கும் சில இயற்கை சிகிச்சைகளைப் பார்ப்போம்.

01. ஆவி பிடித்தல்

சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப்பிடிக்க வேண்டும். ஏனெனில் ஆவிப்பிடித்தால், சருமத்துளைகள் திறந்து, சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை தளர்ந்துவிடும். இதனால் ஆவிப்பிடித்தப் பின் பருத்தி துணி கொண்டு, முகத்தை துடைத்தால் பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் வெளிவந்துவிடும்.

02. கராம்பு

கராம்பும் பருக்களை போக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாகும். அதற்கு கராம்பை நீரில் போட்டு கொதிக்கவிட்டு குளிர வைத்து பின் அதனை அரைத்து பருக்கள் உள்ள இடங்களில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

03. அடிக்கடி முகத்தை கழுவுதல்

அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் படியும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள், எண்ணெய் சுரப்பிகளில் இருந்து வெளியேறும் எண்ணெய்களில் கலந்து முகப்பரு உருவாகுவதில் இருந்து தடுக்கலாம்.

04. சந்தனத் தூள்

சந்தனப் பொடியுடன், தயிர், கடலை மாவை மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், பருக்கள் நீங்குவதோடு முகமும் பொலிவோடு காணப்படும்.

05. தேன்

தேனைக் கொண்டு பருக்கள் உள்ள இடங்களில் மசாஜ் செய்து 15-20 நிமிடம் ஊற வைத்து பால் கொண்டு முதலில் கழுவி பின் நீரில் கழுவினால் சரும வறட்சியை தவிர்ப்பதோடு பருக்களையும் போக்கலாம்.

06. எலுமிச்சை சாறு

எலுமிச்சையின் சாற்றினைக் கொண்டு பரு உள்ள இடத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவினாலும் பருக்கள் நீங்கிவிடும்.

07. பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பருக்கள் எளிதில் போய்விடும்.

08. தக்காளி

தக்காளியும் சருமத்தை சுத்தப்படுத்தி அழகாக வைத்துக் கொள்ள உதவும் சிறப்பான ஒரு பொருள். எனவே தினமும் தக்காளி துண்டைக் கொண்டு சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால், முகப்பருக்களுடன் அதனால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்தும் விடுபடலாம்.

09. வாழைப்பழ தோல்

வாழைப்பழத்தின் தோலை அரைத்து அதில் சிறிது தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால் முகப்பரு மற்றும் மற்ற சரும பிரச்சனைகளான பழுப்பு நிற சருமம் மற்றும் கரும்புள்ளிகளில் இருந்து விடைபெறலாம்.

10. தண்ணீர் குடிக்கவும்

சருமம் பொலிவோடு இருக்க வேண்டுமெனில் உடலில் உள்ள நச்சுக்களை முழுவதும் வெளியேற்ற வேண்டும். அதற்கு தினமும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இதனாலும் பருக்களில் இருந்து தப்பிக்கலாம்.