வெளிநாட்டு விமான நிலையத்தில் பசியால் உயிரிழந்த இலங்கைப் பெண்!!

1009

வெளிநாடு ஒன்றுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் விமான நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.

பஸ்ஸரை, அரசியாகம பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான பிரியங்கா என்ற இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் நீண்ட நாட்கள் உணவின்றி விமான நிலையத்தில் காத்திருந்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த பெண் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்த நிலையில் இலங்கைக்கு வருவதற்கு அவரது உறவினர்களினால் விமான டிக்கெட் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் பயணத்திற்கான திகதியை மாற்றி வீட்டு உரிமையாளர்களினால் அவரிடம் டிக்கட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை நோக்கி செல்லும் விமானத்திற்கு விமான நிலையத்தில் பல நாட்கள் அவர் காத்திருந்துள்ளார்.

இறுதியில் அவர் உணவின்றி உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.

மரண விசாரணையின் போது உயிரிழந்த பெண்ணின் தந்தை சாட்சி வழங்கியுள்ளார். அவரது சாட்சியில்,

“எனக்கு 8 பிள்ளைகள் உள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் எனது இரண்டாவது மகள். அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். எனினும் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என தெரியவில்லை.

எனது 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் 2ஆம் திகதி பணிப்பெண்ணாக டுபாய் நாட்டிற்கு சென்றார். சில காலம் நல்லதொரு இடத்தில் பணி செய்வதாக குறிப்பிட்டார். பின்னர் தனக்கு இடம்பெறும் சித்திரவதை தொடர்பில் அவர் தனது உறவினர்களிடம் அறிவித்தார்.

அதற்கமைய அவருக்கு இலங்கை வருவதற்கான டிக்கட் ஒன்றை உறவினர்கள் அனுப்பி வைத்தனர். விமான நிலையத்திற்கு சென்றவரிடம் இன்று அல்லது நாளை இலங்கை செல்வதற்கான விமான சேவை இல்லை என விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

எனினும் அவர் சில நாட்களாக விமான நிலையத்தில் காத்திருந்த போதிலும் இலங்கைக்கான விமானம் ஒன்று கிடைக்கவில்லை. இறுதியில் உணவின்றி விமான நிலையத்திலேயே உயிரிழந்துள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.