அதிகரித்துள்ள கடலின் சீற்றம் : காணாமல்போன மாணவனை மீட்கும் பணி தீவிரம்!!

250

மழைகாலம் நிலவி வருவதால் அம்பாறையில் கடலின் சீற்றம் அதிகரித்துள்ள நிலையிலும் காணாமல் போன மாணவனை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சம்பவத்தில் சாய்ந்தமருதைச் சேர்ந்த சஹாப்தீன் இன்சாப் எனும் மாணவரே காணாமல் போயுள்ள நிலையில், அவரை தேடும் பணிகளில் மீனவர்களின் உதவியுடன் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

சாய்ந்தமருது, முகத்துவாரத்தை அண்மித்துள்ள கடலில் நேற்று மாலை கல்முனை சாஹிராக் கல்லூரியில் கல்வி பயில்கின்ற ஆறு மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்துள்ளனர்.

இந்த நிலையில் குளிக்கச் சென்ற மாணவர்களில் ஐவர் மீட்கப்பட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் ஒரு மாணவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாணவர்கள் அனைவரும் எதிர்வரும் டிசம்பர் மாதம் க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் காணாமல் போன மாணவரின் குடும்பத்தினர் கல்முனை பொலிஸில் முறைப்பாடொன்றினையும் பதிவு செய்துள்ளனர்.