வவுனியா கள்ளிக்குளம் செல்லும் பிரதான வீதி சேதம் : மக்கள் சிரமம்!!

529

 
வவுனியாவிலிருந்து கள்ளிக்குளம் செல்லும் பிரதான வீதியில் 7 கிராமங்களைச் சேர்ந்த 780 குடும்பங்கள் வசித்து வருகின்றதுடன் இப்பாதையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சேதமடைந்துள்ள இப்பிரதான வீதியைப் புனரமைத்துத்தருமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

வவுனியா கள்ளிக்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள மொத்தம் 9 கிராமங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் வீதம் வழங்கப்பட்டு இப்பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டது. எனினும் ஓமந்தையிலிருந்து செல்லும் பிரதான வீதியானது அன்றிலிருந்து புனரமைப்புச் செய்யப்படவில்லை. அப்பகுதியில் கிரவல் அகழும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இதனால் பிரதான வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதால் மிகவும் மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுவிட்டதாக இப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அவசியத் தேவை கருதி இப்பாதையில் ஒரு நோயாளரை எடுத்துச் செல்ல முடியாதளவிற்கு இப்பாதை மிகவும் குன்றும் குழியுமாகக் காணப்படுவதாகவும் இப்பாதையினூடாகவே எமது பிள்ளைகளும் பாடசாலைக்குச் சென்று வருகின்றனர், எனவே அவர்களின் சீருடைகளும் மிக விரைவில் பழுதடைந்து வருகின்றது.

அப்பகுதியில் கிரவல் அகழ்வுப்பணியினால் இப்பாதை மிகவும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.