பிச்சையெடுத்து சேர்த்த 2.5 லட்சத்தை கோயிலுக்கு தானமாக வழங்கிய மூதாட்டி!!

589

மைசூரில் தான் பிச்சையெடுத்து சேர்த்த 2.5 லட்ச ரூபாயை கோயிலில் பிரசாதம் வழங்குவதற்காக தானமாக கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் மூதாட்டி ஒருவர்.

மைசூரு அருகே உள்ள வண்டிகோபல் என்னும் பகுதியில் பிரசித்தி பெற்ற பிரசன்ன ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. இங்கு பல காலமாக சீதா லட்சுமி எனும் 85 வயது மூதாட்டி பிச்சையெடுத்து வருகிறார். அவ்வாறு அவர் பிச்சை எடுத்து சேர்த்த 2.5 லட்சத்தை, அந்த கோயிலில் அனுமார் ஜெயந்தி அன்று வழங்கப்படும் பிரசாதத்திற்காக செலவிடுங்கள் எனக் கூறி கோயில் நிர்வாகத்தின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

இது குறித்து மூதாட்டி கூறுகையில், பக்தர்கள் தாமாக எனக்கு போடும் காசை தினமும் சேர்த்து வைப்பேன். அது தான் இந்த பணம். இதனை யாராவது திருடி விடுவார்களோ என்று பயம் எனக்கு அதிகரித்தது. அதோடு இவ்வளவு பணத்தை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன். பக்தர்கள் எனக்கு அளித்த பணத்தை, நான் அவர்களுக்கு திருப்பி அளிக்கிறேன். ஏற்கனவே, விநாயகர் சதுர்த்தி அன்று, விழாவுக்காக நான் 30,000 ரூபாயை அளித்திருந்தேன். எனக்கு இறைவன் இருக்கின்றான், அதனால் எனக்கு கவலை இல்லை என தெரிவித்துள்ளார்.