வித்தியா கொலை வழக்கில் விடுதலையானவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!!

512

மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு மற்றுமொரு வழக்கின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எம்.எம். ரியாழ் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேகநபர் சார்பில் சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணி ஒருவர் ஆஜராகியிருந்தார்.

சந்தேகநபரின் குடும்ப நிலையைக் கருத்திற்கொண்டும், வித்தியா படுகொலை வழக்கில் குற்றம் இழைக்காது தண்டனை அனுபவித்தமையாலும் அவரை விடுதலை செய்யுமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

சந்தேகநபரால் அச்சுறுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் Trial at Bar மன்றில் சாட்சியமளித்திருக்கவில்லை என்பதையும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் Trial at Bar மன்றின் தீர்ப்பறிக்கையை ஏற்கனவே பெற்றுக்கொண்டுள்ளதாக இதன்போது நீதவான் தெரிவித்தார்.

எனினும், நீதிமன்றத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என ஏற்கனவே சந்தேகநபருக்கு விளக்கமளித்திருந்த போதும், நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சந்தேகநபர் அச்சுறுத்தல் விடுத்ததாக நீதவான் சுட்டிக்காட்டினார்.

எனவே, சட்டத்தின் பிரகாரம் வழக்கு முன்னெடுக்கப்படுவதாகவும் அடுத்த வழக்குத் தவணையின் போது சந்தேகநபருக்கான கட்டளை பிறப்பிக்கப்படும் எனவும் நீதவான் ஏ.எம்.எம். ரியாழ் அறிவித்தார்.

இதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மாணவி வித்தியா படுகொலை வழக்கில் Trial at Bar தீர்ப்பாயத்தினூடாக விடுதலை செய்யப்பட்ட இந்த சந்தேகநபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள B அறிக்கையின் படி கடத்தல், கூட்டு வன்புணர்வு, கொலை ஆகிய வழக்குகளின் சாட்சியாளரை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.