வவுனியாவில் குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு!!

826

 
வவுனியா மாமடு குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இன்று (24.11.2017) மதியம் 2.30மணியளவில் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக இவர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் பொலிஸாருக்கு தெரிவிக்கும்போது,

இன்று பிற்பகல் 2 மணியளவில் மாமடு குளத்திற்கு குளிப்பதற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் 4 பேர் சென்றிருந்தோம். குளத்தில் கரை ஓரப்பகுதியிலிருந்து தண்ணீரைத் தட்டித் தட்டி ஒருவர் மீது ஒருவர் விளையாடிக்கொண்டிருந்தோம்.

இதில் திருமணமாகி இரண்டு மாதமான 26 வயதுடைய ஜெயப்பிரதாப் மற்றும், அவருடைய ஒன்றுவிட்ட சகோதரியான 16 வயதுடைய பானுரேகா என்ற 2018ஆம் ஆண்டு சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவி ஆகிய இருவரும் குளத்தின் ஆழத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது மற்றைய இருவரும் வெளியே சென்று அயலவர்களின் உதவியை நாடியதுடன் குளத்தில் மூழ்கிய இருவரையும் தேடி மீட்டு அருகிலுள்ள மாமடுவ பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது உயிரிழந்த இருவரின் சடலங்களும் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.