வவுனியா உட்பட ஐந்து இலங்கை போக்குவரத்துச் சபை சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!!

953

 
இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும் வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி இன்று (28.11.2017) காலை முதல் இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் உட்பட வடக்கின் ஐந்து சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வட பிராந்திய ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் இராசரத்தினம் வாமதேவன் கருத்து தெரிவிக்கையில்,

எமது நடவடிக்கைகளை நாங்கள் இன்று முடக்கி வைப்பதற்குறிய காரணம் எங்களுடைய வட பிராந்திய முகாமையாளர் ஒருதலைப்பட்சமாக ஒரு சில குறிப்பிட்ட நபர்களின் கதைகளை கேட்டுக்கொண்டு செயற்படுவதுடன் பழிவாங்கும் நோக்கில் நடந்து கொள்கின்றார்.

வட மாகாணத்தில் தகுதியான பல உத்தியோகத்தர்கள் இருக்கின்ற போதும் தகுதியற்றவர்களுக்கு நியமனம் வழங்கப்படுவதுடன் அவரது கட்சி சார்பானவர்களுக்கே முன்னுரிமை வழங்குகின்றார்.

எங்களது சாலையில் எரிபொருளை நிரப்பி விரயம் செய்வது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும் வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி கடந்த 18.11.2017 அன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டோம் .

அதனைத் தொடர்ந்து இ.போ.சபையின் வவுனியா சாலைக்கு விரைந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் வாசல இவர்கள் இருவரையும் ஒரு வாரத்தினுள் வடமாகாணத்திலிருந்து இடமாற்றம் செய்வதாக வாக்குறுதி வழங்கினார்.

தற்போது 10 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் அவர்கள் இருவரும் இடமாற்றம் செய்யப்படவில்லை. அதன் காரணமாகவே இன்று வடக்கு மாகாணத்திலிலுள்ள வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் , காரைநகர் ஆகிய சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம்.
எமது போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடருமேன மேலும் தெரிவித்தார்.

இருப்பினும் வடக்கு தவிர ஏனைய மாவட்டங்களை சேர்ந்த இ.போ.ச பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் பெருமளவிலான அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கவில்லை.