வவுனியாவில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தவருக்கு  வவுனியா மேல் நீதிமன்றத்தால் கடூழிய சிறை!!

739
வவுனியா மேல்நீதிமன்றத்தில் 9 வயதுடைய சிறுமியினை பாலியல் வன்புணர்வு புரிந்த குற்றத்திற்காக 31 வயது நிரம்பிய நபரிற்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை இன்று (30.11.2017) விதிக்கப்பட்டிருகின்றது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
2009ம் ஆண்டு 07ம் மாதம் 14ம் திகதி செட்டிகுளம் மெனிக்பாம் பகுத்தியில் தன்னுடைய தந்தை மற்றும் சிறிய தாயுடன் வசித்து வந்த 09 வயதுச் சிறுமியை குறித்த குற்றவாளி ஆண்டியாபுளியங்குளம் காட்டுபிரதேசத்திற்கு கடத்திச்  சென்று பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார். குறித்த சம்பவம் இடம்பெறும் போது குற்றவாளிக்கு 22 வயதாகும்.
குறித்த பாலியல் வன்புணர்வு சம்பவத்தின் விளைவாக  சிறுமியின் இனப்பெருக்கத் தொகுதியும், சமிபாட்டுத் தொகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டு சிறுமி கொழும்பு வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு உடடுத்தபட்டு பின்னர் தொடர்ச்சியாக 02 வருடங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளார்.
குறித்த குற்றசம்பவம் தொடர்பிலே சட்டமா அதிபர் திணைகளத்தினால் 2016ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி 2 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றச்சாட்டுப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு ஆரம்பத்தில் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் விளக்கத்திற்கு எடுக்கப்படிருந்த போதிலும் குறித்த குற்றவாளி ஏற்கனவே இதையொத்த இன்னுமொரு பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பிலான வழக்கிலே வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனால் குற்றவாளியாக குற்றத்தீர்ப்பு அளிக்கப்பட்ட காரணத்தினால் வவுனியா நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனின் கோரிக்கையின் பேரில் இவ் வழக்கினை விசாரிப்பதற்காக மன்னார் மேல்நீதிமன்ற நீதிபதி ரீ.எல்.எ.மனாப் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டார்.
அதனடிப்படையில் வழக்கு விசாரணைகள் 2017ம் ஆண்டு 07ம் மாதம் 27ம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டு வழக்கு தொடருநர் தரப்பிலே அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரனால்  சாட்சியங்கள் நெறிப்படுத்தப்பட்டு 2017ம் ஆண்டு 10ம் மாதம் 26ம் திகதியன்று வழக்கு விசாரணைகள் முடிவிற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் இன்றைய தினம் மேல்நீதிமன்ற நீதிபதி ரி.எல்.எ.மனாப் குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும், ரூபா 10000 தண்டபணமும், தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்திலே 2 மாத சாதாரண சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபா 250,000 நஷ்ட ஈட்டுப்பணம் வழங்கவும். நஷ்ட ஈட்டுப்பணம் வழங்கத்தவறும் பட்சத்தில் 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும் இதே குற்றவாளிக்கு 2006ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ம் திகதி அரசடிகுளம் பிரதேசத்தில் ஒரு சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றசாட்டிற்காக 10 வருடகால கடூழிய சிறைத்தண்டனை 2017ம் ஆண்டு 05ம் மாதம் 23ம் திகதி விதிக்கப்பட்டு குறிப்பிட்ட குற்றவாளி தற்போது வவுனியா சிறைச்சாலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.‌