தாண்டவம் ஆடிய ஓகி புயல் : 4 பேர் பலி, 20000 மரங்கள் சாய்ந்தன!!

545

 
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஓகி புயலால் தென் தமிழகத்தில் சூறைக்காற்றுடன் 16 மணிநேரத்துக்கு மேலாக கனமழை பொழிந்தது.

இதில் 20000 மரங்கள் வேரோடு சரிந்ததுடன், 950 மின்கம்பங்கள் சாய்ந்தன. இரவும், பகலும் இடைவிடாது கடும் சத்தத்துடன் காற்று வீசியதால், கடற்கரை கிராமங்களின் வீடுகள் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. கடலும் கொந்தளிப்புடன் காணப்பட்டது, படகுகள் சேதமடைந்தன.

பல வீடுகளில் சுவர்கள், சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்தன, முக்கிய பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சூறைக்காற்றால் வடசேரி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி, ஈத்தாமொழி உட்பட மாவட்டம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான தனியார் தொலைதொடர்பு கோபுரங்கள் செயல் இழந்ததால் செல்போன் சேவை முடங்கியது.

கார்த்திகைவடலியில் வீட்டின் முன்பகுதியிலிருந்த தென்னை மரம் விழுந்து ராஜேந்திரன்(40), ஈத்தாமொழி குமரேசன்(55) ஆகியோரும், பளுகளில் வீடு இடிந்து அலெக்ஸாண்டர்(55) என்பவரும் பலியானார்கள். மண்டைக்காடு பகுதியிலும் ஒருவர் உயிரிழந்தார்.