வவுனியாவில் தீப்பற்றியெரிந்த வர்த்தக நிலையம் : பல பிரதேசங்களுக்கு மின்தடை!!

670

 
வவுனியா மன்னார் வீதி வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு அருகே அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்று இன்று (01.12.2017) மாலை 5.45 மணியளவில் திடீரென தீப்பற்றியெறிந்தமையினால் வவுனியா – மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டு வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவின் உதவியுடன் வவுனியா பொலிஸாரும் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மன்னார் வீதி 6ம் ஒழுங்கைக்கு அருகே அமைந்துள்ள ஹாட்வெயாரில் இன்று மாலை திடீரென தீப்பற்றியுள்ளது. அதனையடுத்து பொதுமக்கள் உடனடியான வவுனியா நகரசபைக்கு தகவல் வழங்கியதுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவினருடன் வவுனியா, நெளுக்குளம் பொலிஸாரும் இணைந்து சுமார் மூன்று மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இத் தீவிபத்து காரணமாக வேப்பங்குளம், குழுமாட்டுச்சந்தி, காத்தான்கோட்டம், தாஸ்கோட்டம், கணேசபுரம், சுந்தரபுரம், கூமாங்குளம், நெளுக்குளம் ஆகிய பகுதிகளின் மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்டதுடன் வவுனியா – மன்னார் வீதியின் போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டு மாற்று வீதியூடாக வாகனங்கள் பயணித்தன.

30க்கும் மேற்பட்ட வாயு சிலின்டர்கள் வர்த்தக நிலையத்திலிருந்து பொதுமக்களின் உதவியுடன் வெளியே அகற்றப்பட்டு இடம்பெறவிருந்த பாரிய அனர்த்தம் தடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத் தீவிபத்து தொடர்பாக விசாரணைகளை வவுனியா பொலிஸாருடன் இணைந்து நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.