வவுனியாவில் வேலையற்ற பட்டதாரிகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!!

446

 
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (02.12.2017) காலை 9.30 மணியளவில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினரால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

இப் போராட்டத்தில் கலந்து கொண்ட வேலையற்ற பட்டதாரிகள் 20,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நியமனம் எங்கே?, எதிர்கட்சி தலைவரே ஏன் மௌனம், நியமன இழுத்தடிப்பு எதற்காக?, அரசே வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எங்கே?, 143 நாள் வீதியில் இருந்தோம் தலைவிதி மாறவில்லை, பேச்சுவார்த்தை போதும் நியமனம் வழங்கு, விண்ணப்பம் கோரியது காலத்தை வீணடிக்கவா? என பல்வேறு வாசகங்களை ஏந்திய பதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தில் 50க்கு மேற்ப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டதுடன் இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளாகிய நாம் எமக்கான தொழில் உரிமையை வேண்டி பல்வேறு வகையான போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் மேற்கொண்டு வந்திருந்ததை தாங்கள் அறிவீர்கள். எனினும் இதுவரை எமக்கான நியாயமான தீர்வொன்று கிடைக்கப்பெறாமல் அரசியல்வாதிகளாலும் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகளாலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டே வந்துள்ளோம்.

எமது 143 நாள் தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக எம்மை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பல்வேறு வாக்குறிகளை எமக்கு வழங்கியிருந்தனர். ஆனால் அதற்க்கு நடந்தது என்ன என கேள்வி எழுப்பினர்.

வவுனியா மாவட்டத்தில் 399 வேலையற்ற பட்டதாரிகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.