வவுனியா நகர கிராம சேவையாளர் அலுவலகத்தில் இன்று (02.12.2017) காலை 10 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி , வவுனியா நகர், வைரவர்புளியங்குளம், கற்குழி,தோணிக்கல் மற்றும் வைரவர்புளியங்குளம் சிவில் அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் உரையாற்றிய தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியாவில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சில அசம்பாவித சம்பவங்களை பற்றியும் பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள கடைகள் தீப்பற்றி எரிந்தமை பற்றியும் கலந்துரையாடினார்.
இச்சம்பவங்களை வைத்து ஒரு சிலர் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இனக்கலவரம் ஒன்றை தூண்டுவதற்கு முயற்சித்துள்ளதாகவும், அவர்களை இனம் கண்டு எமது மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்ததுடன், நேற்றைய தினம் வேப்பங்குளம் பகுதியில் வியாபார நிலையம் தீப்பற்றியதையும் ஒருசாரார் வீண் வதந்திகளை பரப்பிவருவதாகவும் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்கள் பண்டிகை காலங்களாக இருப்பதால் இளைஞர்கள் மது போதையில் மோட்டார் சைக்கிள்களை வேகமாக செலுத்துவதாலும், கூட்டமாக குழுக்களாக நின்று பொதுமக்களுக்கு இடையூறு செலுத்துபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உங்களின் பிள்ளைகளை நீங்களே திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை வைரவபுளியங்குளம், குருமன்காடு பகுதிகளில் இளைஞர்கள் அட்டகாசம் செய்கிறார்கள் என ஒருவர் தெரிவித்ததற்கு பதிலளித்த பொறுப்பதிகாரி, மாலை வேளைகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் தவறுகள் இடம்பெறும் பட்சத்தில் தம்மை நேரடியாக தொடர்பு கொள்வதற்கு தொலைதொடர்பு இலக்கத்தையும் வழங்கியிருந்தார்.










