வவுனியாவில் வீடு புகுந்து திருட்டு : மோப்ப நாயின் உதவியுடன் பொலிசார் தீவிர தேடுதல்!!

316

வவுனியா குருமன்காடு, கரப்பன்காட்டில் நேற்று (08.12.2017) இரவு இரு வீடுகளில் புகுந்த திருடர்கள் அங்கு தமது கைவரிசையைக்காட்டியுள்ளனர். இதையடுத்து இன்று (09.12.2017) பொலிசார் சம்பவ இடத்தில் மோப்ப நாயின் உதவியுடன் தீவிர தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு 8.45 மணியளவில் குருமன்காடு, கரப்பன்காட்டிலுள்ள இரு வீடுகளுக்குள் சென்ற திருடர்கள் அங்கு வீட்டு உரிமையாளர்கள் முன்நிலையில் அவர்களின் கைபேசிகளையும் பணப்பையிலிருந்த பணத்தினையும் திருடிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து குறித்த வீட்டு உரிமையாளர் பொலிசாரின் அவரச தொலைபேசி இலக்கத்திற்கு முறையிட்டுள்ளார்.
இதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகள் மேற்கொண்டு வரும்போது அதே பகுதியிலுள்ள இன்னொரு வீட்டிற்குள் புகுந்த குறித்த திருடர்கள் அங்கிருந்த மின்சார தொழிநுட்பப் பொருட்களை ஐபாட், கைபேசிகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து இரு வீட்டு உரிமையாளர்களும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மேலதிகமாக இன்று சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மோப்பநாய்களின் உதவியுடன் திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.