வவுனியாவில் வாள்களுடன் வந்த இளைஞர்கள் பொலிஸார் மீது தாக்குதல்!!

595

வவுனியா, பசார் வீதியில் மோட்டர் சைக்கிளில் வாள்களுடன் வந்த இருவர் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா தர்மலிங்கம் வீதி வழியாக வேகமாக வந்த மோட்டர் சைக்கிள் ஒன்று பசார் வீதி வழியாக வவுனியா நகரை நோக்கிச் சென்றுள்ளது.

இதன்போது பசார் வீதியில் இருந்து மில் வீதிக்கு செல்லும் சந்தியில் போக்குவரத்து கடமையில் இருந்த இரு போக்குவரத்து பொலிஸார் குறித்த மோட்டர் சைக்கிளை மறித்துள்ளனர்.

இதன்போது மோட்டர் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் போக்குவரத்து பொலிஸாரை காலால் எட்டி உதைந்துள்ளார். இதனையடுத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் நிலை தடுமாறி கீழே வீழ்ந்துள்ளார்.

போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கீழே வீழ்ந்ததும் மோட்டர் சைக்கிளை வேகமாக செலுத்திய போது, குறித்த மோட்டர் சைக்கிளில் பின்பக்கத்தில் இருந்தவர் தவறி கீழே விழுந்துள்ளார்.

மோட்டர் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு வாள்களும் இதன்போது கீழே விழுந்துள்ளன. கீழே விழுந்த இளைஞன் தப்பியோடிய நிலையில், போக்குவரத்து பொலிஸார் இரு வாள்களையும் மீட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த வீதியில் உள்ள பாதுகாப்பு கமராவை பரிசோதித்தால் குறித்த மோட்டர் சைக்கிளை கண்டு பிடிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.