வவுனியா புதிய பேருந்து நிலைய விவகாரம் : மீண்டும் எழுந்தது பிரச்னை!!

457

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லுமாறு தம்மை கட்டாயப்படுத்தினால் முதலாம் திகதியிலிருந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கத்தின் தலைவர் வாமதேவன் தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பேருந்து நிலையம் தொடர்பாக வழக்கொன்று நீதிமன்றத்தில் உள்ளது. இந்த நிலையில் வட மாகாண முதலமைச்சரினால் வவுனியாவில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் தொடர்பாக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் முதலாம் திகதியில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு எம்மையும் செல்லுமாறு தெரிவித்ததுடன் பழைய பேருந்து நிலையத்தினை மூடுமாறும் தெரிவித்துள்ளார்.

இதன் போது எமக்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. எனினும் இந்த விடயத்தில் சம்பந்தப்படாதவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர். 1800க்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட எமது சங்கத்தினை வெளியேறுமாறு தெரிவித்து முதலமைச்சர் கூட்டத்தை நடத்தியதனால் எம்மை அவமதித்து விட்டார் என தெரிவித்தார்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது ஓர் நீதியரசராக இருந்தவர் நீதிமன்றத்தையே அவமதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நாம் கடந்த 53 வருடங்களாக செயற்பட்டு வரும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து எம்மை வெளியேற்ற கோருவது நியாயமற்றது. நாம் 2018 ஆம் ஆண்டுக்கான நிதியை நகரசபைக்கு செலுத்தியுள்ளோம். எனினும் அந்த பணத்தை மீண்டும் எமக்கு செலுத்திவிட்டு எம்மை வெளியேற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லுமாறு தெரிவிக்கின்றனர்.

எனவே எமது சேவைகளை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செயற்படுத்துமாறு தெரிவித்தால் எமது தொழிலாளர்களின் நலன்கருதி முதலாம் திகதியில் இருந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் வரலாற்றில் முதன்முறையாக ஆதிவாசிகளுடன் கிரிக்கெட் போட்டி..