வவுனியாவில் 2வது நாளாகவும் இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்!!

428

 
பேரூந்து நிலையம் தொடர்பாக வழக்கொன்று நீதிமன்றத்தில் உள்ள நிலையில் வட மாகாண முதலமைச்சரினால் பழைய பேரூந்து நிலையம் நேற்று (01.01.2018) அதிகாலையுடன் மூடப்பட்டு புதிய பேரூந்து நிலையத்திற்கு இ.போ.சபையினரை செல்லுமாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிய பேரூந்து நிலையத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்து இ.போ.ச சபையினர் இரண்டாவது நாளாக இன்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை பழைய பேரூந்து நிலைய கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள 130க்கு மேற்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பழைய பேரூந்து நிலையத்திற்கு பேரூந்துகள் வந்து செல்வது முற்றாக தடைப்பட்டால் தமது வர்த்தகம் முழுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்து வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றார்கள். அத்துடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

வவுனியா பேருந்து நிலைய விவகாரம் தொடர்பில் இ.போ.ச பேருந்துகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பட்சத்தில் பருவச்சீட்டுக்களை பெற்றுள்ள பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் தனியார் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க முடியுமெனவும் பயணிகளின் நலன் கருதி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை இலவச பேருந்து சேவையை முன்னெடுப்பதாகவும் வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் ரி.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியாவில் 195 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையத்திலிருந்து தனியார் பேரூந்துகள் கடந்த வாரம் முதல் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து தமது சேவையினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.