வவுனியாவில் ஈ.பி.டி.பி வேட்பாளரின் தாயார் மீது தாக்குதல்!!

277

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான தர்மகுலசிங்கம் சுஜிவன் என்பவரது தாயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதுடன், குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்திலும், தேர்தல் அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் குலசிங்கம் திலீபன் கருத்து தெரிவிக்கையில்,

“இன்று மாலை தமது வேட்பாளரின் வீட்டிற்கு சென்ற இனந்தெரியாத நபர்கள் வேட்பாளர் எங்கே? என அவரது தாயாரிடம் வினவியதோடு, அவரை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

தவறினால் விளைவு வேறுவிதமாக இருக்குமென கூறியதுடன், தாங்கள் வைத்திருந்த தலைக் கவசத்தால் வேட்பாளரின் தாயாரை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களிடம் எமக்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்துக்கொள்ளாத விசமிகள் இப்படியான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

சிலரது தூண்டுதலின் பெயரில் இப்படியான செயல்களில் ஈடுபடுபவர்கள் ஒன்றை யோசித்துக்கொள்ளுங்கள். யார் உங்களை தூண்டிவிட்டார்களோ அவர்கள் இறுதியில் உங்களை கை விட்டுவிடுவார்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.