இ.போ.சபை வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் இ.போ.சபையின் வட பிராந்திய தொழிற்சங்க ஊழியர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அந்த வகையில் குறித்த உணவுத்தவிர்ப்புப் போராட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இ.போ.சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற்சங்க செயலாளர் அருளானந்தம் அருள்பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
வட மாகாண முதலமைச்சர், கொழும்பில் இருந்து சென்ற குழுவினர் மற்றும் வட மாகாண இ.போ.சபையினருக்கு இடையில் நேற்று வட மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது புதிய பேருந்து நிலையத்தில் இ.போ.சபையினருக்கு ஒரு பகுதி தருவதாகவும், தூர இடத்திற்கு செல்லும் பேருந்துகளும், வெளி மாகாணங்களில் இருந்து வரும் பேருந்துகளும் நேராக செல்ல வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் இணைந்த நேர அட்டவணையில் இ.போ.சபையினருக்கு 40 வீதமும், தனியாருக்கு 60 வீதமும் கொடுத்து புதிய நேர அட்டவணை தயாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே போராட்டத்தை கைவிடுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி.சந்ரசிறி அறிவித்திருந்தார்.
இருப்பினும் இந்த தீர்மானத்திற்கு தம்மால் உடன்பட முடியாது என தெரிவித்து இ.போ.சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற்சங்க ஊழியர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
ஏற்கனவே இ.போ.சபையின் பணிப்புறக்கணிப்பினால் பாதிப்பினை எதிர்நோக்கியிருந்த நிலையில், இ.போ.சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற்சங்க ஊழியர்களின் தீர்மானத்தினால் மீண்டும் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வியை மக்கள் எழுப்பியுள்ளனர்.
-தமிழ்வின்-





