வவுனியாவில் 4வது நாளாகவும் தொடர்ந்து இ.போ.ச பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்!!

1446

 
வட மாகாண முதலமைச்சரினால் பழைய பேரூந்து நிலையம் கடந்த (01.01.2018) அதிகாலையுடன் மூடப்பட்டு புதிய பேரூந்து நிலையத்திற்கு இ.போ.சபையினரை செல்லுமாறு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

புதிய பேரூந்து நிலையத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்து இ.போ.ச சபையினர் நான்காவது நாளாக இன்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் தங்களது வர்த்தகமும் பாதிக்கப்படும் என தெரிவித்து பழைய பேரூந்து நிலைய கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள 130க்கும் மேற்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கடந்த மூன்று நாட்களாக வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்பு கொடிகளை பறக்க விட்டு கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். இந் நிலையில் இன்றைய தினம் வர்த்தக நிலையங்களை திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியாவில் 195 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையத்திலிருந்து தனியார் பேரூந்துகள் கடந்த வாரம் முதல் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து தமது சேவையினை முன்னெடுத்து வருகின்றனர்.

வடமாகாண முதலமைச்சர், கொழும்பில் இருந்து சென்ற குழுவினர் மற்றும் வடமாகாண இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் இடையில் நேற்று (03.01.2018) முதலமைச்சரின் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது 40:60 என்ற பங்கீட்டு முறையில் சேவையை முன்னெடுப்பதற்கு வடமாகாண இலங்கை போக்குவரத்து சபை சம்மதித்தமை குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து நேற்று (03.01.2018) மாலை வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட வட மாகாண முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் ரூபினி வரதலிங்கம், சிரேஸ்ட செயலாளர் வியஜலட்சுமி கேதீஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்துரையாடியதுடன் இன்றையதினம் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து தங்களது சேவையினை மேற்கொள்ள இரு தரப்பினர்களும் சம்மதம் தெரிவித்ததாக தெரிவித்தனர்.

புதிய பேரூந்து நிலையத்தினை தனியார் , இ.போ.ச என இரண்டாக பிரித்து தரும் படசத்தில் நாங்கள் செல்ல தயார் என இ.போ.ச வவுனியா சாலை ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.

இ.போ.ச ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றையதினமும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றார்கள். அத்துடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் பருவகால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.