கிரீன் காட் குடியேற்ற வீசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் நவம்பர் 2ம் திகதியுடன் நிறைவடைகின்றது. ஆர்வமுள்ளவர்கள் நவம்பர் 2ம் திகதி இரவு 9.30 மணிவரை விண்ணப்பிக்கலாம் என்று அமெரிக்க தூதரகத்தின் கொன்சியூலர் பிரிவின் தலைமை அதிகாரி சல்லி ஸ்டேர்னல் தெரிவித்தார்.
அமெரிக்க நிலையத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
பச்சை அட்டை (கிரீன் காட்) அதிஷ்டக் குலுக்கல் என்ற அழைக்கப்படும் இந்த வீசாவுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலம் கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி ஆரம்பமானது. நவம்பர் மாதம் இரண்டாம் திகதியுடன் நிறைவடைகின்றது.
இலங்கை மற்றும் மாலைதீவு உள்ளிட்ட சில நாடுகளில் பிறந்தோருக்கு இந்த அதிஷ்டக் குலுக்கலின் ஊடாக வீசாவை பெறும் வகையிலான நேர்காணல் ஒன்றுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.
அமெரிக்காவில் சட்டபூர்வமான நிரந்தர குடிமக்களாக கருதப்படுவதற்கான குடிவரவு வீசாக்களுக்கு தகைமை பெறுவதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கின்றது.
இது தொடர்பான தகவல்களை அடைவதற்கு ஆர்வம் கொண்டுள்ளவர்கள் www.srilanka.usembassy.gov/visas/diversity-visa-lottery-program.என்ற இணையத்தளத்தில் பரிசீலிக்கலாம்.
மேலும் அதிஷ்டக் குலுக்களுக்கு விண்ணப்பிப்பதாயின் www.dvlottery என்ற இணையத்தளத்தை பார்வையிடவேண்டும்.
விண்ணப்பதாரி ஒரு முறை மட்டுமே விண்ணப்பிக் முடியும். ஒரு விண்ணப்பதாரி ஒரு முறையில் இரு தடவை விண்ணப்பித்தால் தகைமையை இழக்க நேரிடும்.
பல்வகைமை வீசாவுக்கு தேவையான தகைமைகளான கல்வித் தகைமையையும் தொழில் அனுபவ தகைமையையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
இணையத்தளத்தில் விண்ணப்பித்த பின்னர் அதற்கான உறுதிப்படுத்தப்பட்ட இலக்கம் வழங்கப்படும்.
வீசா நேர்காணலுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா இல்லையா என்பதனை இந்த இலக்கத்தைக்கொண்டே பரீசீலனை செய்யவேண்டும்.
எனவே அந்த இலக்கத்தை பாதுகாத்து வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.
மேலும் இணையத்தளத்தில் விண்ணப்பிப்பது முற்றிலும் இலவசமாகும். எதுவித மறைமுக செலவுகளும் கிடையாது.
2014ம் ஆண்டு மே மாதத்தில் விண்ணப்பதாரிகள் www.dvlottery.state.gov என்ற இணையத்தளத்தை பார்வையிட்டு வீசா நேர்காணலுக்கு நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக தெரிவு குறித்து அறிவிக்கப்படமாட்டாது. மாறாக விண்ணப்பதாரிகளே பரிசீலனை செய்ய வேண்டும்.
வருடாந்தம் 200 க்கும் 300 க்கும் இடைப்பட்டவர்கள் அமெரிக்காவுக்கு இந்த முறைமை ஊடாக செல்கின்றனர்.
சில நாடுகள் மட்டுமே இந்த முறைமைக்கு தகுதி பெற்றுள்ளன. தெரிவு செய்யப்படுகின்றவர்கள் அமெரிக்காவில் வாழ்வதற்கும் தொழில் செய்வதற்கும் கல்வி கற்பதற்கும் தகுதியை பெறுவார்கள்.
இதேவேளை இலங்கையிலிருந்து சட்டரீதியற்ற முறையில் அமெரிக்கா செல்லும் சம்பவங்கள் மிகவும் குறைவானதாகும். அவை தொடர்பான புள்ளிவிபரங்கள் என்னிடம் இல்லை. இலங்கையர்கள் வீசா நடைமுறையை பின்பற்றுகின்றவர்கள். என்றார் கொன்சியூலர்.