இலங்கை வந்த இந்திய அமைதிப்படையின் தமிழ் இராணுவ வீரருக்கு சிலை!!

469

இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப்படையில் பணியாற்றி உயிரிழந்த மேஜர் பரமேஸ்வரனின் சிலை தமிழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிலையினை சென்னை இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், இராணுவ கொமாண்டர் லெப்டினண்ட் ஜெனரல் ராஜன் ரவீந்திரன் நேற்று திறந்து வைத்துள்ளார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “தமிழகத்தில் வலிமையான, அறிவுமிகுந்த இளைஞர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் இராணுவத்தில் இணைந்துகொள்வதில்லை. அவர்கள் இராணுவத்தில் இணைந்துகொள்ள வேண்டும். இதேவேளை, இராணுவம் இலங்கைக்கு அமைதிப்படையாகவே சென்றது. கொடுத்த பணியையே செய்தது. உத்தரவுகளை பின்பற்றியது.

எவ்வாறாயினும், இராணுவத்தில் அரசியல் கிடையாது” என லெப்டினண்ட் ஜெனரல் ராஜன் ரவீந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.