நியூசிலாந்தில் 8 வருடங்களாக வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எனினும் குறித்த குடும்பம் நியூசிலாந்தில் தொடர்ந்தும் அந்த நாட்டில் வசிப்பதற்கு மனிதாபிமான முறையீடு ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில், அதன் தீர்ப்பிற்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் குடும்பத்திலுள்ள பிள்ளைகள் அங்கு பாடசாலை கற்கையை தொடர்வதற்கு நியூசிலாந்து அரசாங்கம் நிதி உதவி வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
பிள்ளைகளின் தாய் தினேஷா அமரசிங்க மற்றும் தந்தை சாம் இந்த செய்தியை கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். “நான் மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றேன். எனது பிள்ளைகளின் கற்கைகள் பாதிக்கும் என வருத்தத்தில் இருந்தேன். எனினும் இந்த செய்தி என்னை மகிழ்ச்சியடைய செய்துள்ளது” என தாய் தெரிவித்துள்ளார்.
11, 10 மற்றும் 8 வயதுடைய விஜேரத்ன என்பவரின் பிள்ளைகள் குயின்ஸ்டவுன் முதன்மை பாடசாலையில் கல்வி கற்று வந்த திறமையான மாணவர்களாகும்.
2010ஆம் ஆண்டு இந்த சிறுவர்களின் தாயார் தினேஷா அமரசிங்க நியூசிலாந்தில் மருத்துவ மாணவியாக பதிவு செய்துள்ளார். அவருக்கு 10 ஆண்டு தொழில் அனுபவம் உள்ளதோடு, நியூசிலாந்தின் திறமையான புலம்பெயர்ந்தோர் பிரிவின் கீழ் 2011ஆம் ஆண்டு முதல் ஒக்லாந்தில் சமையல் கலைஞராக பணியாற்றியுள்ளார்.
2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்த குடும்பம் குயின்ஸ்டவுனுக்கு மாற்றப்பட்டது, அங்கு பிரபலமான Lone Star உணவகத்தில் தினேஷா சமையல் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். அவரது விசாவில் கணவருக்கு திறந்த பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கமைய அவர் New World சுப்பர் மார்க்கெட்டில் பணி புரிந்ததோடு, டெக்ஸி சாரதியாகவும் செயற்பட்டு வந்துள்ளார். 2014ஆம் ஆண்டு தினேஷா தவறி விழுந்தமையினால் அவரது இடுப்பு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது காலில் வலி ஏற்பட்டமையினால் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்த போதிலும், அவர் தொடர்ந்து பணி செய்து வந்துள்ளார்.
எனினும் 2015 ஆம் ஆண்டு ACC என வருத்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு மே மாதம் அவரது தனது மூளையை பரிசோதித்து பார்த்த போது அவர் ஸ்களீரோசிஸ் (sclerosis) எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோம்பர் மாதம் தினேஷாவினால் பணி புரிய முடியவில்லை என்பதால், அவரது திறமையான தொழிலாளிக்கான தற்காலிக விசா நிராகரிக்கப்பட்டது. இதனால் அவரது கணவரால் இனி வேலை செய்ய முடியாது என கூறப்பட்டதுடன், அவர்களது குடும்பம் கடந்த நவம்பர் 21ம் திகதி நியூசிலாந்திலிருந்து வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக அவர்கள் 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்த நிரந்தர விசா தாமதமாகியதாக கூறப்பட்டது.
இவ்வாறான நிலையில் அந்த குடும்பத்தினர் தொடர்ந்து அங்கு தங்குவதற்கு மனிதாபிமான முறையீடு ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது அதன் முடிவிற்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.







