யாழில் அடித்துக் கொலை செய்யப்பட்ட பெண் : 21 வயது இளைஞனின் வாக்குமூலம்!!

530

யாழில் பெண்ணொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இளைஞன் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆணைக்கோட்டை ஆறுகால்மடம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெகநாதன் சத்தியபாமா என்ற 72 வயது பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் பொலிஸார் தெரிவித்ததாவது,

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது கொலை இடம்பெற்ற பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த இரகசிய கமராவில் பதிவாகிய காட்சிகள் மூலம் சந்தேகநபரான 21 வயது இளைஞர் அடையாளம் காணப்பட்டார்.

அத்துடன் குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என தெரியவந்த நிலையில் அவரை கடந்த 24ஆம் திகதி மடக்கிப் பிடித்தோம். இதனையடுத்து சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் தனது வாக்குமூலத்தில்,

நான் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவன் என்பதால் யாழிலுள்ள மருந்தகம் ஒன்றில் போதை மாத்திரைகளை வாங்கி அடிக்கடி பயன்படுத்துவேன். இந்த நிலையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட தினத்தன்று நான் போதைப்பொருளை பயன்படுத்தியிருந்த போதும் எனக்கு மேலும் போதைப்பொருள் தேவைப்பட்டது. எனினும் என்னிடம் போதைப்பொருளை வாங்குவதற்கான பணம் இருக்கவில்லை. அந்த மூதாட்டியின் வீட்டிற்கு அருகிலேயே எங்களது வீடு உள்ளது. அந்த மூதாட்டி வசித்து வந்த வீட்டிற்கு சென்று நுழைந்த போது அவர் அறைக்குள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து அருகிலிருந்த ஸ்டூலின் மூலம் அவரை நான் அடித்துக் கொன்றேன். அதன்பின்னர் அவர் அணிந்திருந்த இரு மோதிரங்கள் மற்றும் காப்பு என்பவற்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டேன். அந்த நகைகளை சண்டிலிப்பாய் – கோணாவளை பகுதியிலுள்ள நண்பனிடம் கொடுத்து 15000 ரூபா தருமாறு கேட்டேன். இருப்பினும் அவர் 5000 ரூபாவை தந்து மீதி பணத்தை மறுநாள் தருவதாக தெரிவித்தார் என குறிப்பிட்டார்.